Sunday 11 December 2011

கெடுவான் கேடு நினைப்பான்

வசந்தபுரி மகாராணி நோய்ப் படுக்கையில் துவண்டு கிடக்க, இளவரசன் விக்கிரமன் கண்ணீர் சிந்தியவாறு அருகில் இருக்க, மதிவாணர், முத்துராசர் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கைபிசைந்தவாறு நின்றார்கள்!
“மதியூக மந்திரிகளே! இனி நான் பிழைப்பேன் என்ற நம்பிக்கை இல்லை. பத்து வயதே நிரம்பப் பெற்ற என் மைந்தன் விக்கிரமனை உங்களிடம் ஒப்படைத்துச் செல்லுகிறேன். நீங்கள் தான் அவனுக்குப் பாதுகாப்பாய் இருக்க வேண்டும்” என்று மகாராணி கண்ணை மூட, அதற்கான இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்பு, நல்ல நாள் ஒன்று பார்த்து இளவரசன் விக்கிரமனுக்கு முடிசூட்டு விழா நடத்தி, இரண்டு அமைச்சர்களும் அவனுக்கு உறுதுணையாக இருந்து இராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்கள்.
இரண்டு அமைச்சர்களில் மதிவாணர் நல்லொழுக்கம் நிரம்பப் பெற்ற திறமைசாலி. அறிவும் ஆற்றலும் எங்கிருந்தாலும் அதற்கு மதிப்புக் கொடுத்து பெருமைப்படுத்தும் பண்பினர். முத்துராசரின் அறிவாற்றலைக் கண்டு முன்பு வசந்தபுரி அரசனாயிருந்த மகேந்திர பூபதிக்குப் பரிந்துரை செய்து, அதன்பின் மகாராணி காலத்தில், அவர் உதவி அமைச்சர் பதவிக்கே உயர்வதற்குக் காரணமாக இருந்தவர் மதிவாணர்தான்.
ஆனாலும் உதவி அமைச்சர் முத்துராசருக்கு மதிவாணர் மேல் ஒருவிதக் காழ்ப்புணர்ச்சி இருந்தது. மதிவாணர் இருக்கும்வரை, சூரியனிடமிருந்து ஒளி பெறும் சந்திரனைப் போலத்தான் இருக்க முடியுமே தவிர, தானே சூரியனாகப் பிரகாசிக்க முடியாது என்ற சுயநல உணர்வு அவரது இதயத்தை வாட்டிக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு வழி செய்ய முடியாதா என்று பல நாளாக ஏங்கிக் கொண்டிருந்தார் முத்துராசர்.
ஒரு நாள் இளவரசனும் முத்துராசரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, “அமைச்சரே! என் அன்னையார் இப்போது சொர்க்கத்தில் சுகமாக இருப்பார்களல்லவா?” என்றான் இளவரசன்.
“இளவரசே! மகாராணியார் இருப்பது சொர்க்கமா? நரகமா? என்பதை நிச்சயமாக எப்படிச் சொல்ல முடியும்? இப்படி இருந்தாலும் இருக்கலாம். அப்படி இருந்தாலும் இருக்கலாம்” என்று சந்தேகத்திற்குரிய ஒரு பதிலைக் கொடுத்தார் முத்துராசர்.
துணிக்குற்ற இளவரசன், “என் அன்னையார் எங்கிருக்கிறார்கள் என்று எனக்கு உடனே தெரிந்தாக வேண்டும். அதற்கு என்ன வழி?” என்றான்.
“யாராவது ஒருவரை சொர்க்கத்திற்கு அனுப்பித்தான் பார்த்து வரச் சொல்ல வேண்டும்” என்றார் முத்துராசர்.
“யாரை அனுப்பலாம்?” என்றான் இளவரசன்.
சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த முத்துராசர், “இதற்குத் தகுதியானவர் எனக்குத் தெரிந்த வரையில் மதிவாணர் ஒருவர் தான்!” என்று விநயமாகப் பதில் சொன்னார்.
“எப்படி அனுப்புவது?” என்று சந்தேகம் கேட்டான் இளவரசன்.
“மகாராணியாரின் உடலை எவ்விதம் சிதையில் வைத்துத் தீயிட்டு அனுப்பினோமோ, அதே போல் தான் மதிவாணரையம் அனுப்ப வேண்டும்” என்ற சந்தேகம் தீர்த்தார் முத்துராசர்.
உடனே மதிவாணரை வரவழைத்தான் விக்கிரமன். விவரம் எல்லாம் சொல்லி, அவர் தான் அந்தக் காரியத்தைச் செய்து உதவ வேண்டும் என்று முதலில் வேண்டுகோள் விடுத்துக் கடைசியில் உத்தரவில் முடித்தான்.
முத்துராசரின் வஞ்சக எண்ணத்தைப் புரிந்து கொண்ட மதிவாணர், புன்முறுவல் மாறாத முகத்தினராய், “நாளையே ஏற்பாடுகள் நடக்கட்டும்” என்ற பதிலளித்தார்.
அன்று இரவே இரகசியமாக நம்பகமான ஐம்பது பணியாளர்களை அழைத்து, இடுகாட்டில் இருந்து பக்கத்தில் இருந்த பாழடைந்த மண்டபம் வரைக்கும் சுரங்கம் தோண்டுகிற வேலையைச் செய்து முடித்தார் மதிவாணர்.
அடுத்த நாள், மாலையும் கழுத்துமாய் மதிவாணர் ஊர்வலமாய் இடுகாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அமைச்சர் சொர்க்க லோகம் போகும் காட்சியைக் காண ஊரே திரண்டுவிட்டது.
இடுகாட்டில் சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டுச் சிதை தயாராக இருந்தது. அமைச்சரின் முன்னேற்பாட்டின் படி, மையப் பகுதியில் சுரங்கப் பாதைக்கு இடம்விட்டு, வெளிப்பார்வைக்கு அது தெரியாத படி சுற்றிலும் சிதை அடுக்கப்பட்டிருந்தது. ஊர்வலம் வந்ததும் சிதைக்குத் தீ வைக்கப்பட்டது. மரப்பலகைகளால் அமைந்திருந்த மேடையின் மீது ஏறி, கொழுந்துவிட்டு எரியும் சிதையின் நடுவில் குதித்தார் மதிவாணர். கூடியிருந்த அனைவரும் “வாழ்க மதிவாணர்!” என்று வானதிரக் குரல் எழுப்பினர்.
காரியம் கன கச்சிதமாக முடிந்தது என்பதில் முத்துராசருக்கு முழுத் திருப்தி. இனிமேல் அவருக்குப் போட்டியாக யாரும் இல்லை. அவர் வைத்தது தான் சட்டம்.
சிதையின் நடுவில் குதித்த மதிவாணர், சுரங்கப் பாதை வழியாக, பாழடைந்த மண்டபத்தை அடைந்து, இருட்டும் வரை அங்கேயே ஒளிந்து கொண்டிருந்து, பின்பு, தனது மாளிகையை அடைந்து, அங்கேயே இரகசியமாக யாருக்கும் தெரியாமல் பொறுமையாகக் காலங்கழித்தார்.
இப்போது அமைச்சர் முத்துராசரின் புகழ் கொடி கட்டிப் பறந்தது. இளவரசன் அடிக்கடி, “மதிவாணர் சொர்க்கத்திலிருந்து எப்போது திரும்புவார்?” என்ற கேள்வியைக் கேட்க, “சொர்க்கம் போய் வருவது சாமானியமா? சமயத்தில் ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம்!” என்று முத்துராசர் தந்திரமாய்ப் பதிலளித்து வந்தார்.
ஆறு மாதங்கள் கழிந்த பின்பு ஒரு நாள் காலை மதிவாணர் திடீரென்று மாளிகையைவிட்டுக் கிளம்பி, நீண்டு வளர்ந்த தாடியும் பரட்டைத் தலையுமாக, இளவரசன் முன் வந்து நின்றார்.
மதிவாணரைப் பார்த்ததும் இளவரசனுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
அமைச்சர் முத்துராசரோ, “சிதையில் விழுந்து செத்த மதிவாணர் எப்படி உயிர் பெற்று வந்தார்?” என்று ஒன்றும் விளங்காதவராய், என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சத்துடன் நின்றார்.
“அம்மா நலமாக இருக்கிறார்களா?” என்று ஆவலை அடக்க முடியாதவனாய் இளவரசன் கேட்க, “மகாராணியார் சொர்க்கத்தில் நலமாக இருக்கிறார்கள். அரசே! இன்னொரு மகிழ்ச்சியான செய்தி! அவர்கள் சொர்க்கத்தில் தனியாக இல்லை. உங்கள் தந்தையாரான மகேந்திர பூபதியுடன் ஆனந்தமாய் இருக்கிறார்கள்” என்று மதிவாணர் தாடியைத் தடவியவாறு பதில் சொன்னார்.
மகிழ்ச்சியடைந்த இளவரசன், “ஆமாம்.. நீங்கள் ஏன் தாடியும் பரட்டைத் தலையுமாக நிற்கிறீர்கள்” என்று வினவினான்.
“சொர்க்கத்தில் சிகை அலங்கரிப்போர் கிடைக்கவில்லை அரசே! அதனால் முடி வளர்ந்துவிட்டது! தங்களைப் பார்க்கும் ஆர்வ மிகுதியால் நேராக இப்படியே வந்து விட்டேன்! அரசர் அனுமதித்தால் மாளிகைக்குச் சென்று முடிகளைந்து வருகிறேன்!” என்றவாறு மதிவாணர் புறப்பட்ட போது, “ஆமாம்.. அம்மா ஏதாவது சொல்லி அனுப்பினார்களா?” என்று இளவரசன் கேட்கவே, “பார்த்தீர்களா முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்! மகாராணியார் ஒரு சின்னத் தகவலைச் சொல்லி அனுப்பினார்கள். இத்தனை வருஷமாக உங்கள் தந்தையார் மகேந்திர பூபதி, முடி களையாததால் தலை முகமெல்லாம் பயங்கரமாய் முடி மண்டிக்கிடக்கிறது. அது மிகவும் இடைஞ்சலாக இருப்பதால், முடி களைய முடி வெட்டும் கலையில் வல்லவரான முத்துராசரை அனுப்புமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்கள்” என்று விநயமாகப் பதிலளித்தார் மதிவாணர்.
அவ்வளவுதான்! முத்துராசர் சொர்க்கம் புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் அன்றே செய்யப்பட்டன. அவரிடம் கொடுத்தனுப்ப, கத்தி கத்தரிக்கோல் அனைத்தும் அடங்கிய அழகான பெட்டி ஒன்றும் தயார் செய்யப்பட்டது.
“வேண்டாம் அரசே!” என்று முத்துராசர் எவ்வளவோ புலம்பிப் பார்த்தார்.
“மதிவாணர் தாடியும் பரட்டைத் தலையுமாகத் திரும்பினார்! உங்களுக்கு அந்தக் கவலை இல்லை. கையோடு தான் பெட்டி கொண்டு செல்கிறீர்களே! மறந்து விடாதீர்கள்! எனக்கிருப்பது போல் அழகான கிருதா வைத்து, என் தந்தையாருக்கு நவநாகரிகமாய் முடி களைய வேண்டும்!” என்று இளவரசன் உத்தரவு பிறப்பித்தவனாய், இடுகாட்டில் கொழுந்துவிட்டு எரிந்த சந்தனச் சிதையில், முத்துராசரை அவனே முன் நின்று பிடித்துத் தள்ளினான்.
மதிவாணரைச் சொர்க்கத்திற்கு அனுப்ப நினைத்த முத்துராசர், இப்போது நரகத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.

Sunday 4 December 2011

எங்கே போக விருப்பம்?

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார்.
“சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி பெருபான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுமானால், பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். We will give you protection from the cradle to the grave”.
இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்த மக்களிடையே பெருத்த ஆரவாரம்.
அடுத்த நாளும் அதே இடத்தில் பெருங்கூட்டம். மேடையில் ஆறடிக்கு மேல் வளர்ந்த ஒற்றை நாடியான உருவம். வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஆணித்தரமாக உதிர்ந்தன. கணீரென்று ஒலித்தன.
“உடன் பிறந்தோரே! ‘உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்!’ என்று கேட்பதில் பெருமைப்படுகிறேன். நான் சார்ந்திருக்கும் கட்சி ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்று பணிபுரியும் கட்சி! என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் நேற்று இங்கே “பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும்” என்று சொன்னாராம். எங்கள் கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்குக் கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் கவலையில்லை! We will give protection from the womb to the tomb.”
இதைக் கேட்ட மக்களிடையில் எழுந்த ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாயிற்று.
ஆம்! இரண்டாவதாகப் பேசிய ஒற்றை நாடி உருவந்தான் “மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி” என்ற புகழ் வாய்ந்த வாக்கியத்தை உலகுக்குத் தந்த ஆபிரகாம் லிங்கன். அவர் செனட் தேர்தலுக்கு நிற்பதால் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருந்தார். புயல் வேகத் தேர்தல் சுற்றுப்பயணம்! அவர் மட்டுந்தானா? எதிர்க் கட்சி வேட்பாளரும் அப்படியே!
அன்று ஞாயிற்றுக்கிழமை. கிருத்துவ மத வழக்கப்படி எல்லாரும் மாதா கோவில் செல்ல வேண்டும். அங்கே பாதிரியாரின் மதப் பிரசங்கத்திற்குச் செவி சாய்க்க வேண்டும். ஆபிரகாம் லிங்கனும் மாதா கோவிலுக்கு வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
புதிதாக வந்திருந்த இளம் பாதிரியார் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“ஏசுவானவரை விசுவாசிக்கிறவர்களே! உங்கள் விசுவாசம் வீண் போவதில்லை! நீங்கள் திரும்பவும் விசுவாசிக்கப்படுவீர்கள்! தேவ குமாரன் உங்களுக்காகத்தான் சிலுவையில் மாய்ந்தார்! உங்கள் பாவங்களைப் போக்கி இரட்சிப்பதற்காகத்தான் அவர் மூன்று நாள் கழித்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வந்தார். இப்போது அந்த தேவகுமாரன் தன் தந்தையான இறைவரோடு சொர்க்கத்தில் உறைகிறார். ஏசுவானவரை நேசித்து நீங்களும் அந்த சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேசிப்பதில் குறையிருந்தால் உங்களுக்கு நரகந்தான் கிட்டும். அந்த நகரம் சாத்தானுக்குப் பிரீதியான இடம்! எங்கே.. இப்போது சொல்லுங்கள்! நீங்கள் போக விரும்புவது சொர்க்கமா, நரகமா? சொர்க்கத்திற்குப் போக விரும்புவர்களெல்லாம் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்!”
பாதிரியாரின் இந்த வேண்டுகோள் மண்டபத்தில் எதிரொலித்ததும் கூடியிருந்தோர் அனைவரும் கையைத் தூக்கினார்கள். ஆனால், ஆபிரகாம் லிங்கன் மட்டும் கை தூக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த வேண்டுகோளைத் தொடுத்தார்.
“எங்கே..,? நரகத்திற்குப் போக விரும்புகிறவர்கள் கையை உயர்த்துங்கள்!”
மண்டபத்தில் ஒரு கை கூட உயரவில்லை. இப்போதும் ஆப்ரகாம் லிங்கன் முன் போலவே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இப்போது முன்னிலும் பன்மடங்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, பாதிரியார், “மிஸ்டர் லிங்கன்! நீங்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை! நரகத்திற்கும் போக விரும்பவில்லை! அப்படியானால் வேறு எங்கு தான் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆப்ரகாம் லிங்கனிடமிருந்து கணீரென்று பதில் வந்தது. “நான் செனட்டுக்குப் போக விரும்புகிறேன்!”
ஆம்! தேர்தலில்; வெற்றி பெற்று அவர் செனட்டுக்குத் தான் போனார். பிறகு அமெரிக்காவில் வெள்ளை மாளிகை என்று பெயர் பெற்ற ஜனாதிபதி மாளிகையிலும் குடியேறினார்.

http://puthu.thinnai.com/?p=6582

Tuesday 29 November 2011

சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள்.
ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே சஸ்பென்ஸ் திரில் சொல்லுங்கள்” என்றார்.
இதைக் கேட்ட ஹிச்காக், “நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்டிக்காரன் இல்லை. உடனே உங்களை சஸ்பென்ஸில் ஆழ்த்தும் ஆற்றல் என்னிடம் கிடையாது. இருந்தாலும் என் நண்பர் மார்ட்டின் என்பவருக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அநுபவத்தைக் கூற விரும்புகிறேன்” என்றவாறு கீழ்கண்ட நிகழ்ச்சியை விவரித்தார்.
பாரிஸ் நகரில் செலவழிக்க பிரெஞ்சுப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தன் மனைவியை ஓட்டல் அறையிலேயே பத்திரமாய் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த டாலர் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, அந்நியச் செலவாணி மாற்றித் தரும் வங்கி ஒன்றுக்குப் போய், பிரெஞ்சுப் பணம் மாற்றிக் கொண்டார். இந்த அலைச்சலில் கொஞ்சம் அசதி ஏற்பட்டதால் தலைவலி தோன்றவே, ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக் காபி சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த சிற்றுண்டி விடுதியில் நுழைந்து, காபிக்கு ஆர்டர் செய்தார்.
அப்போது கிண்கிணிக் குரலில் சிரிப்பொலி கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தார் மார்ட்டின். அருகில் மயக்கும் பேரழகுடன் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன உதவி தங்களுக்கு நான் செய்யக் கூடும்,” என்று ஆடவர்க்கே உரிய ஒயிலோடு ஆங்கிலத்தில் கேட்டார். ஆனால் அந்தப் பெண் ஒன்றும் பேசாமல், முத்துப் பற்கள் தெரிய முகத்தில் ஒரு மோகனப் புன்னகையைத் தவழவிட்டவளாய், கையகலக் காகிதத் துண்டு ஒன்றை டேபிளில் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.
காகிதத் துண்டை எடுத்துப் பார்த்த மார்ட்டினுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதியிருந்தது. ‘அடடா..! பிரெஞ்சுக் கற்றுக் கொள்ளாதது எவ்வளவு தப்பு” என்று மனத்திற்குள்ளாகவே எண்ணிக் கொண்டிருந்த போது, சர்வர் காபியைக் கொண்டு வந்து வைத்தான். ஆவலை அடக்க முடியாத மார்ட்டின், அந்தக் காகிதத் துண்டை சர்வரிடம் கொடுத்து, வாசித்துக் காட்டும்படியாய்க் கேட்டார்.
அதைப் படித்த சர்வருக்கு முகமெல்லாம் ‘குப்’பென்று ரத்தம் பாய்ந்து சிவப்பானது. ‘என்ன?’ என்றார் மார்ட்டின். பதில் பேசாத சர்வர் பற்களை நரநரவென்று கடித்தவாறு, முஷ்டி பிடித்த தன் வலக்கரத்தை டேபிளில் ஓங்கிக் குத்திவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றான். ஒன்றும் புரியாத மார்ட்டின், சர்வர் கீழே போட்டுச் சென்ற காகிதத் துண்டை எடுத்துக் கொண்டு, காபியில் ஆஸ்பிரின் மாத்திரையைக் கலந்து சாப்பிட்டபின், டேபிளில் அதற்குரிய சில்லரையை வைத்துவிட்டு எழுந்தார்.
சிற்றுண்டி விடுதியின் கேஷ் கவுண்டரைக் கடந்தபோது, அந்தக் காகிதத் துண்டை கேஷியரிடம் கொடுத்து படித்துச் சொல்லும்படி பவ்யமாக கேட்டுக் கொண்டார் மார்ட்டின். அதைப் படித்த கேஷியர், கோபம் கொப்பளிக்க, பிரெஞ்சு மொழியில் ஏதோ கத்தினார். உடனே பயில்வான்கள் போன்ற இரண்டு பணியாளர்கள் அங்கே வந்து, மார்ட்டினின் கோட்டைப் பற்றி இழுத்து, வெளியிலே தள்ள, வீதியில் வந்து குப்புற விழுந்தார்.
‘இது என்ன விபரீதம்?’ என்று எண்ணமிட்டவராய், கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறு, வீதியில் நடக்க ஆரம்பித்தார். ‘டாண் டாண்’ என்று மாதா கோவில் மணியோசை கேட்டது. கைத்தடி ஊன்றியவாறு எதிரில் பாதிரியார் வந்து கொண்டிருந்தார். ‘இவர் தான் இதற்குச் சரியான ஆள்’ என்று முடிவு செய்த மார்ட்டின், அந்தப் பாதிரியாரை அணுகி, ‘இதைப் படித்துக் காட்டுங்களேன்’ என்று காகிதத் துண்டைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்;த்த பாதிரியார், உடம்பெல்லாம் பதற, ‘கர்த்தரே காப்பாற்றும்’ என்று முணுமுணுத்தவாறு, மார்பில் சிலுவைக் குறியிட்டு, கைத்தடியை நழுவ விட்டதால், கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார்.
மார்ட்டினுக்கு முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. இனிமேல் முயன்றால் பேராபத்தாய் முடியும் என்று எண்ணியவாறு, நேரே தன் மனைவியை விட்டு வந்திருந்த ஓட்டலுக்குப் போனார். அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. மனைவிக்கு பிரெஞ்சு மொழி தெரியும். உயிரையே தன் மேல் வைத்திருக்கும் மனைவி, தவறாக ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள் என்று முடிவு செய்தவராய், நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறி, காகிதத் துண்டை அவளிடம் கொடுத்து, ‘அப்படி அதில் என்ன தான் எழுதியிருக்கிறது?’ என்று கேட்டார்.
அவளும் அதைப் படித்துப் பார்த்தாள். அவ்வளவுதான்! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது! ஒன்றுமே பேசாத அவள், நேரே வக்கிலைத் தேடிச் சென்று, தன் கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி, கோர்ட்டில் வழக்கு தொடுத்துவிட்டாள்.
பயணம் வந்த இடத்தில் இப்படி ஒரு பயங்கரம் நேர்ந்ததே என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் மார்ட்டின். ‘உயிருக்குயிரான மனைவியே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுத்துவிட்ட பிறகு இனி வாழ்வில் என்ன இருக்கிறது. உயிரை விட வேண்டியதுதான்’ என்று முடிவுக்கு வந்தவராய், பாதுகாப்புக்காகப் பெட்டியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, நெற்றிப் பொட்டில் வைத்து, விசையை அழுத்தப் போனார். பளிச் என்று ஓர் எண்ணம். ‘சாவது தான் சாகப் போகிறோம். இவ்வளவுக்கும் காரணமான அந்த காகிதத் துண்டில் என்னதான் எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நிம்மதியுடன் சாகலாம்’ என்ற நினைப்பில், அதை எடுத்துக் கொண்டு ஓர் இராணுவ அதிகாரியின் வீட்டுக்குப் போனார்.
“என்ன விஷயம்?” என்று அந்த இராணுவ அதிகாரி கேட்க, அதற்கு மார்ட்டின், நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறி, “முதலில் இந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தான் கொண்டு போன கைத்துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு, “நான் தரப் போகும் காகிதத் துண்டில் ஏதோ மர்மச் செய்தி அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் எனக்குத் தயவு செய்து படித்துக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கு வந்தது போல் உங்களுக்கும் கோபம் வந்தால், அந்தத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிடுங்கள். ஆனால் அதற்கு முன்பு, காகிதத் துண்டில் எழுதியுள்ள விஷயம் என்ன என்பதை மட்டும் எனக்குச் சொல்லிவிட வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட இராணுவ அதிகாரி, “முதலில் அந்தக் காகிதத் துண்டை எடுங்கள்” என்றார்.
மார்ட்டின் அதை எடுக்கக் கோட்டுப் பாக்கெட்டில் கையை விட்டார். திகீரென்றது. காரணம். அந்தக் காகிதத் துண்டைக் காணவில்லை.
இந்தக் கட்டத்தில் ஹிச்காக்கின் உதவியாளர் அவரிடம் வந்து காதில் ஏதோ மெதுவாகச் சொல்லவே, “அப்படியா?” என்றவாறு சோபாவைவிட்டு எழுந்தார்.
ஆனால், கதை கேட்டுக் கொண்டிருந்த செல்வந்தர், “முடிவைச் சொல்லிவிட்டுப் போங்கள்! அந்தக் காகிதத் துண்டில் அப்படி என்னதான் எழுதியிருந்தது?” என்று ஆவல் மிகுந்தவராய்க் கேட்டார்.
“மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். சொல்கிறேன்” என்றவாறு ஹிச்காக் போயே போய்விட்டார்.
மாலை வரை செல்வந்தர் தலையைப் பியத்துக் கொண்டார். ஆவலை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சரியாக ஐந்து மணிக்கு ஹிச்காக்கின் வீட்டிற்குச் சென்று “இனியும் என்னால் தாங்க முடியாது. சொல்லுங்கள் அந்த மர்மச் செய்தியை!” என்றார்.
அதைத் தெரிந்து கொள்ள உங்களைவிட எனக்கும் ஆவல் தான். ஆனால், மார்ட்டின் என்ன தேடியும் அந்தக் காகிதத் துண்டு கிடைக்கவேயில்லையே!” என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ஹிச்காக்.

Wednesday 23 November 2011

முள் எடுக்கும் முள்

கோதையாறு நீர்த் தேக்கத்துக்குப் பக்கத்தில் ஒரு சின்னக் கிராமம். இது குமரி மாவட்டத்தில் கேரள நாட்டின் எல்லைக்கு அருகில் உள்ளது. அங்கு, சின்னச்சாமி ஒரு பெரிய புள்ளி! நிறைய ரப்பர் எஸ்டேட்! வயது அறுபதுக்கு மேல் ஆனாலும் உடம்பில் ஒரு மினுமினுப்பு! சம்சாரம் தவறிப்போய் நாலைந்து வருஷமிருக்கும்! ஒரே மகன். டாக்டருக்குப் படித்துவிட்டு உள்ளுரிலேயே வேலை பார்க்கிறான்.
சின்னச்சாமியின் ரப்பர் எஸ்டேட்டுக்குப் பக்கத்தில் ஒரு காணி நிலம். அதில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்கள்! அத்துடன் சின்ன வாழைத் தோட்டம்! இது பெரியசாமி என்ற கிழவனுக்குச் சொந்தமாக இருந்தது. சின்னசாமி கூட அடிக்கடி, “ஐநூறு ஏக்கர் ரப்பர் எஸ்டேட் இருந்து என்ன பிரயோஜனம்! எனக்குப் பெயர் சின்னசாமிதான்! ஆனால், நீதான் பெரியசாமியாக இருக்கிறாய்!” என்று பெயர்ப்பொருத்தத்தைப் பற்றி வேடிக்கையாகச் சொல்லுவார்.
பெரியசாமி குடிசை வீட்டில் திடீரென்று ஒரு நாள் அதிசயம். நீலவானத்துப் பூரண சந்திரன் ‘கலகல’வென்று சிரித்து விளையாடிக் கொண்டிருந்தது.
ஆம்! பதினாறு வயது பருவ மங்கை! மணிக்கட்டு எலும்பு எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கமுடியாத அளவு மொழுமொழுவென்ற சதைப்பிடிப்பு! பளபளக்கும் பொன்மேனியில் மலையாளத்து மினுமினுப்பு! பார்த்துவிட்டால் போதும், பார்வையை வேறு பக்கம் திருப்பவே மனம் வராது! அப்படி ஒரு கவர்ச்சி!
அவளுக்குப் பெயர் கோதையம்மை. பெரியசாமியின் மகள் வயிற்றுப் பேத்தி. தக்கலைக்குப் பக்கத்து கிராமத்தில் தாயிழந்த பெண்ணாக, தந்தையின் ஓடுகாலிதனத்தைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இவளைப் பெரியசாமிக் கிழவன் தன்னுடைனேயே இருக்கும்படி அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.
சின்னசாமியின் கண் ஒரு நாள் கோதையம்மையின் மேல் விழுந்துவிட்டது. அவ்வளவுதான்! தேகம் முழுவதும் ஒரு சிலிர்ப்பு உணர்ச்சி! உடம்பின் அத்தனை நரம்புகளிலும் முறுக்கேறிய மதமதப்பு!
அடுத்த நாள் பெரியசாமியின் குடிசை வீட்டுக்கு வெற்றிலைப் பாக்குப் பழத் தட்டுடன் சின்னசாமி விஜயம் செய்தார்.
“என்ன விஷயம்” என்று கேட்டான் பெரியசாமிக்கிழவன். பரிசம் போட வந்திருப்பதாக, சின்னசாமியிடமிருந்து பதில் வந்தது.
பெரியசாமிக் கிழவனுக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. சின்னசாமியின் மகனோ டாக்டர். அவன் பேத்திக்கு இப்படி ஓர் அதிர்ஷ்டமா?
“உங்க மகனைக் கட்டிக்க என் பேத்தி கொடுத்து வச்சிருக்கணும்!” என்றான் பெரியசாமிக் கிழவன் தழுதழுத்தக் குரலில்.
சின்னசாமி சிடுசிடுத்தார். “மகனுக்குப் பெண் பார்க்கல்லே கிழவா! எனக்குத்தான் பார்க்கிறேன்! உன் பேத்தியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்றார் ஓங்காரக் குரலில்.
முதலில் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் தவித்த பெரியசாமிக் கிழவனுக்கு இப்போது வாயும் ஓடவில்லை. சிலையாக நின்றான். ஆனால், கதவுப் பக்கத்தில் மறைந்து நின்ற கோதையம்மை ‘களுக்’ என்று சிரித்தாள்.
“பாத்தியா! பெண்ணுக்குச் சம்மதம்!” என்றார் சின்னசாமி.
“ஆமா! உங்களுக்கு மாலை போட காத்திருப்பேன்!” என்று கோதையம்மையின் குரல் கதவுக்குப் பக்கமிருந்து வந்த போது, “ஆஹா! ஆஹா!” என்று பரமானந்தமாகச் சின்னச்சாமி வாயைத் திறக்க, பல் செட்டு பளபளத்தது.
ஆனால், அடுத்து வந்த வார்த்தைகள் சின்னசாமியை அதிர வைத்தன.
“சின்னசாமித் தாத்தா! பச்சை மூங்கியிலே, நாலு பேருக்கு மத்தியிலே நீங்க கடைசி ஊர்வலம் வரபோது, உங்களுக்கு மரியாதை செலுத்தி மாலை போட நான் காத்திருப்பேன்!”
காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரத்தோடிருக்கும் பத்தினிப் பெண்ணைத் தேடி வந்த சின்னச்சாமி அவமானம் தாங்க முடியாமல் கருவிக் கொண்டே வெளியேறினார். சும்மா இருப்பாரா? அடுத்த நாளே ஊர்ப்பஞ்சாயத்தார் முன்னிலையில் வழக்குப் போட்டார். கிழவன் அவமானப்படுத்திவிட்டான் என்றா? அது தான் இல்லை!
ஆறு மாதத்திற்கு முன்பு சின்னச்சாமியிடம் பெரியசாமிக் கிழவன் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கியதை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை! அதைப் பஞ்சாயத்தார் வாங்கிக் கொடுக்க வேண்டும்! இது தான் வழக்கு.
பெரியசாமிக் கிழவன் வெலவெலத்துப் போனான். “பணம் கொடுக்காமலே அபாண்டமாய் இப்படிப் பழி சுமத்தலாமா?” என்று சின்னச்சாமியிடம் பேசிப் பார்த்தான். “நீயும் உன் பேத்தியுமாக என்னை அவமானப்படுத்தியதற்கு பழி வாங்காமல் விட மாட்டேன்! பஞ்சாயத்துக்கு வா! சாட்சியோடு நிரூப்பிக்கிறேன்!” என்று ஒரேயடியாகச் சொல்லிவிட்டார் சின்னச்சாமி.
சாட்சியோடு நிரூபித்துவிட்டால் பெரியசாமிக் கிழவனின் பாடு அதோகதி தான். வாங்காத பணத்தை அவன் கட்டியாக வேண்டும். இருக்கும் ஒரு காணி நிலத்துக்கும் ஆபத்து வந்துவிடும்.
பஞ்சாயத்தும் கூடியது. சின்னச்சாமியின் சார்பில் இரண்டு பேர் சாட்சி சொன்னார்கள். அதன் சாராம்சம்: “நாங்கள் ஆடி அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்குப் போயிருந்தோம். அப்போது பெரியசாமிக் கிழவன் இவரிடத்தில் ஐயாயிரம் ரூபாய் கைமாற்று வாங்கிக் கொண்டு ஐப்பசி மாதத்தில் திருப்பிக் கொடுப்பதாகச் சொல்லிப் போனான்!”
இந்தச் சாட்சிக்குப் பிறகு பஞ்சாயத்தார் பெரியசாமிக் கிழவனை விசாரித்தார்கள். நான் சொல்ல ஒன்றுமில்லையென்று தன் சாட்சியை விசாரிக்கலாமென்றும் அவன் சொன்னான்! அந்தச் சாட்சி சொன்னதாவது: “நானும் ஆடி அமாவாசையன்று சின்னசாமியின் வீட்டுக்குப் போயிருந்தேன். முன் சாட்சிகள் சொன்னது போல் ஐயாயிரம் ரூபாய் கைமாற்றுக் கொடுத்தது உண்மைதான்!”
இதைக் கேட்டதும் சின்னச்சாமிக்கு படுகுஷி! “பார்த்தீர்களா?” என்று தாவிக் குதித்தார். ஆனால், அந்தச் சாட்சி தொடர்ந்து சொன்னான்:
“அதன் பிறகு மூன்று மாதம் கழித்து ஐப்பசி மாத அமாவாசையன்று சின்னச்சாமியின் வீட்டுக்கு நான் போக நேர்ந்தது. அப்போது இந்தப் பெரியசாமிக் கிழவன் அங்கே வந்து கைமாற்று வாங்கிய ஐயாயிரத்தையும் திருப்பிக் கொடுத்ததை நான் பார்த்தேன்!”
இதைக் கேட்ட பஞ்சாயத்தார், “சின்னச்சாமி பொய் வழக்குப் போட்டதற்காக, பெரியசாமிக் கிழவனுக்கு நஷ்ட ஈடு கட்ட வேண்டும்” என்று தீர்ப்புச் சொன்னார்கள்.
வாங்காத கடனைக் கொடுக்காமலேயே அடைத்துவிட்டான் பெரியசாமிக் கிழவன்! முள்ளை முள்ளால் எடுத்துவிட்டான்! இந்த முள்ளெடுக்கும் முள்ளை அவனுக்கு யார் கொடுத்தது?
அவனுடைய துடுக்குப் பேத்தி கோதையம்மைதான்!

Sunday 13 November 2011

சிலையில் என்ன இருக்கிறது?

விவேகானந்தருக்கு எங்கே பார்த்தாலும் பரபரப்பான வரவேற்பு? ஏனிந்த வரவேற்பு?

1893-ம் ஆண்டு அமெரிக்க நாட்டின் சிக்காகோ நகரில் நடந்த அனைத்துலக மதப் பேரவையில் கலந்து கொண்டு இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டி விட்டு அப்போதுதான் இந்தியாவிற்குத் திரும்பி இருந்தார். அப்படி அவர் அங்கே என்னதான் சாதித்தார்?

ஆரம்பத்தில், பேரவையில் பேச விவேகானந்தருக்கு வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம். பிறகு அவருக்கு, சில நமிடங்கள் பேசும் வாயப்புக் கிடைத்தது. “சீமான்களே! சீமாட்டிகளே! என்று எல்லோரும் பேச்சைத் தொடங்க, “;சகோதரிகளே! சகோதரர்களே!” என்று புதுமையாகப் பேச்சைத் தொடக்கி, முதல் வார்த்தையிலேயே கூடியிருந்தவர்களின் உள்ளங்கவர் கள்வரானார்!

அவர் பேசிய கவர்ச்சிமிகு ஆங்கில நடை அனைவரையும் அடிமை கொண்டது. பிறகு நடைபெற்ற ஒவ்வொரு விவாதத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்று பேரவையினரால் அவர் விரும்பி அழைக்கப்பட்டார். அந்த விவாதங்களில் இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவங்களை எல்லாம் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களும் மெச்சும்படியாய் அலசிக் காட்டினார்.

மேலும் இந்துக்களின் பிரம்மம், ஜோராஸ்டர்களின் அஹ_தா மஜ்தா, பௌத்தர்களின் புத்தர், யூதர்களின் ஜெஹோவா, கிருஸ்தவர்களின் பரமண்டலப் பிதா எல்லாம் ஒன்றே என்ற பொதுமைக் கருத்தைப் பாங்குற நிலை நாட்டினார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் பேச்சைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள் பலர் அவரது சீடர்களாகவே மாறிவிட்டார்கள்.

இத்தனைச் சாதனைகளையும் புரிந்து திரும்பியிருக்கும் விவேகானந்தருக்குப் பரபரப்பான வரவேற்பு இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. முப்பத்தி இரண்டே வயதான அந்த இளைஞரைப் பார்த்து ஜனங்களெல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டார்கள். “மங்கிப் போயிருந்த இந்தியாவின் ஆன்மீகப் புகழை மறுபடியும் மணம் பெறச் செய்ய வந்திருக்கும் மகான்!” என்று எல்லோரும் அவரை வாயாரப் புகழ்ந்தார்கள்.

மராட்டிய மாநிலத்தில் ஒரு சிற்றரசர். அவர் விவேகானந்தருக்கு அரண்மனையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சிற்றரசர் உலக நாடுகளெல்லாம் சுற்றி வந்தவராகையால் எல்லாவற்றிலுமே முற்போக்குக் கருத்துக்களைக் கொண்டவர். மூடப் பழக்கங்களை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் மிகுந்தவர். ஆயிரக்கணக்கான கடவுளர் உருவங்களையெல்லாம் அழித்து ஒழித்துவிட்டு, “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கொள்கையை நம் இந்து மதத்தில் புகுத்த வேண்டும் என்று மனதார விரும்பியவர். அவர்தான் விவேகானந்தரின் அமெரிக்கப் பயண வெற்றியைக் கருத்தில் கொண்டு அவரைச் சிறப்பிக்க வேண்டும் என்று வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

வரவேற்பு மண்டபம் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசர் அமரும் ஆசனத்திற்குப் பின்புறம் ஆளுயரத்திற்கும் மேலாக சதுரவடிவத்தில் கட்டடம் எழுப்பப்பட்டு, அதன்மேல் அரசரின் இடை அளவான அழகுச்சிலை கம்பீரமாக அமைக்கப் பெற்றிருந்தது. அந்தச் சிலையே உயிர் பெற்று வந்தது போல், கீழே ஆசனத்தில் அரசர் அமர்ந்திருக்க, ஜனக்கூட்டம் மண்டபமெல்லாம் பொங்கி வழிந்தது.

தேனாகப் பொங்கிய விவேகானந்தரின் சொற்பொழிவு முடிந்ததும், மக்கள் கையொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதற்கு நன்றி தெரிவித்து அரசர் பேசும்போது, “சிலை வணக்கம் என்பது நமக்குத் தேவையில்லை. ஆண்டவனை வணங்க நமக்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. கற்சிலையை வணங்குவது பாமரத்தனத்தைத்தான் காட்டும். கேவலம் சிலையில் என்ன இருக்கிறது? என்று பொழிந்துத் தள்ளித் தம் முற்போக்குக் கருத்துக்களை விளக்கிக் கூறினார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு நவ நாகரிகப் பெண்மணி இந்தப் பேச்சைப் பெரிதும் ரசித்துக் கைத்தட்டி மகிழ்ந்தாள்.

அரசரின் பேச்சு முடிந்ததும் அதை ரசித்துக் கைத்தட்டிய நவ நாகரிக நங்கையை விவேகானந்தர் அழைத்தார். “என்ன?” என்றவாறு அவளும் மேடைக்கு வந்து நின்றாள்.

“இதோ இருக்கிறதே அரசரின் கம்பீரமான சிலை! இதன் மேல் கொஞ்சம் எச்சில் உமிழ்வதுதானே?” என்றார் விவேகானந்தர்.

“அபச்சாரம் அபச்சாரம்!” என்றாள் பதறிப் போன நங்கை.

“ஏனிப்படிப் பதற வேண்டும்?” என்றார் விவேகானந்தர்.

“சிலையின் மேல் உமிழ்ந்தால் அரசர் மேல் உமிழ்ந்தது போல்!” என்றாள் நங்கை பரபரப்புடன்.

“கேவலம் சிலையில் என்ன இருக்கிறது?” என்றார் விவேகானந்தர் அமைதியாக.

இதைக் கேட்டதும் அந்த நங்கை தலை குனிந்தாள். அவள் மட்டுமல்ல! அரசருங்கூடத்தான்!

Sunday 6 November 2011

மூன்று தேங்காய்கள்

சந்திரகிரி என்ற ஊரில் திருமேனி என்பவன் தன் மனைவியுடன் எளிய வாழ்க்கை நடத்தி வந்தான். ஏழையாக இருந்தாலும் விருந்தோம்பும் நல்ல பண்பு அவனிடம் இருந்தது. அவன் மனைவி அமிர்தம் விருந்தினர் யார் வந்தாலும், வீட்டில் உள்ளதை இன்முகத்தோடு முதலில் அவர்களுக்குக் கொடுத்து, மிஞ்சியதை உண்ணும் பழக்கமுள்ளவள். இவ்விதம் இவர்கள் கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடன் வாழ்ந்து வந்தார்கள்.
ஒரு நாள் வீதி வழியே முனிவர் ஒருவர் வந்தார். அவரைப் பார்த்ததும் வணங்கிய திருமேனி, தன் வீட்டிற்கு வந்து உணவு கொள்ள வேண்டும் என்று வேண்டினான். முனிவரும் மகிழ்ச்சியுடன் திருமேனியின் வீட்டிற்கு வந்து உணவு உண்டார். அமிர்தம் முகம் கோணாமல் மிகவும் கவனமாய் உணவு பரிமாறியது முனிவருக்கு மிகவும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அதனால் முனிவர் தன் தோளில் தொங்கவிட்டிருந்த ஒரு பையில் இருந்து மூன்று தேங்காய்களை எடுத்துத் திருமேனியிடம் கொடுத்தார்.
“அப்பனே! இந்தத் தேங்காய்கள் சாதாரணமானவையல்ல! நீ எந்தப் பொருள் வேண்டும் என்று நினைத்து இவற்றை உடைக்கிறாயோ, அந்தப் பொருள் உனக்குக் கிடைக்கும்;. ஆனால், ஒவ்வொரு தேங்காயை உடைக்கும்போதும் ஏதாவது ஒரு வகைப் பொருளைத்தான் நினைத்துக் கொள்ள வேண்டும். பல வகையான பொருள்களை நினைத்துக் கொண்டு உடைத்தால் பலிதமாகாது!” என்று தேங்காய்கள் பற்றிய மகத்துவத்தை விளக்கிவிட்டு முனிவர் போய்விட்டார்.
திருமேனி நீராடி, பூசையும் நிகழ்த்திய பிறகு, தன் மனைவியை நோக்கி, “நீ விரும்பும் பொருளைச் சொல். அதை நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடைக்கிறேன்” என்றான். அதற்கு அமிர்தம், “உங்கள் விருப்பமே என் விருப்பம்” என்றாள்.
எனவே, திருமேனி, ‘ஒரு மாளிகை வேண்டும்” என்று மனத்தில் எண்ணியவனாய், முதல் தேங்காயை உடைத்தான். உடனே அந்தக் குடிசை வீடு, பெரிய மாளிகையாய் மாறிவிட்டது. ‘பொன்னாபரணங்கள் வேண்டும்’ என்று மனத்திற்குள் எண்ணியவனாய், இரண்டாவது தேங்காயை உடைத்தான். உடனே அவன்முன் மூன்று பெட்டிகள் நிறையப் பொன்னாபரணங்கள் தோன்றின. ‘பட்டாடைகள் வேண்டும்’ என்று மனத்திற்குள் நினைத்தவனாய் மூன்றாவது தேங்காயை உடைத்தான். உடனே மூன்று பெட்டிகள் நிறைய தினுசு தினுசாய் பட்டாடைகள் தோன்றின. எல்லாவற்றையும் பார்த்த திருமேனியும் அமிர்தமும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவர்களாய், தான தருமங்கள் செய்து இனிய வாழ்க்கையை மேற்க்கொண்டார்கள்.
திருமேனியின் வீட்டுக்கு எதிரில் பக்கிரி என்பவன் தன் மனைவி பாக்கியம் என்பவளுடன் வாழ்ந்து வந்தான். அவன் எச்சிற் கையால் கூடக் காக்காய் ஓட்ட மாட்டான். மனைவி பாக்கியம் அவனை விடக் கைகாரி. கழுவிய கையால் கூட காக்காய் ஓட்ட மாட்டாள். இவர்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்குப் போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வருவார்களே தவிர, யாருக்கும் இதுவரை விருந்து வைத்ததே இல்லை. இவ்விதமான சுயநல வாழ்க்கை இவர்கள் வாழ்ந்து வந்தார்கள்.
எதிரில் இருந்த குடிசை மாளிகையானதைக் கண்ட பாக்கியம், தன் கணவன் பக்கிரியிடம், திருமேனியைச் சந்தித்து அவன் பணக்காரன் ஆன இரகசியத்தைக் கேட்டு வரும்படி நச்சரித்துக் கொண்டே இருந்தாள். பக்கிரியும் ஒரு நாள் திருமேனியைச் சந்தித்து விவரம் கேட்க, திருமேனியும் முனிவர் வந்தது முதல் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். இதைக் கேட்ட பக்கிரி தன் வீட்டுக்குத் திரும்பி, மனைவியிடம் விளக்கவே, உடனே போய் முனிவரைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படித் தன் கணவனை விரட்டினாள் பாக்கியம்.
வீட்டுக்கு வெளியில் வந்த பக்கிரி ஆச்சரியத்தால் கண்களை மலர்த்திப் பார்த்தான். தொலைவில் முனிவர் வந்து கொண்டிருந்தார். அவரை எதிர்கொண்டழைத்த பக்கிரி தன் வீட்டிற்கு வந்து உணவு உண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். முனிவரும் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து உணவு உண்டார். அரை அரைக் கரண்டியாக பாக்கியம் அமுது படைத்தது முனிவருக்கு எரிச்சல் மூட்டிய போதிலும், அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. உண்டு முடித்ததும் பாக்கியம் முனிவரைப் பார்த்து, “சாமி! எதிர் வீட்டுத் திருமேனிக்குக் கொடுத்தது போல் எங்களுக்கும் மூன்று தேங்காய்கள் கொடுக்க வேண்டும்” என்று வேண்டவே, முனிவரும் தன் தோளில் தொங்கப் போட்டிருந்த பையிலிருந்து மூன்று தேங்காய்களை எடுத்துக் கொடுத்து, உடைக்கும் போது ஒரே ஒரு வகைப் பொருளை நினைத்தால்தான் பலிதமாகும் என்ற விவரத்தையும் சொல்லிவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
முனிவர் போனதுதான் தாமதம்! “சேலையாக வர வேண்டு;ம் என்று நினைத்துக் கொண்டு முதல் தேங்காயை உடையுங்கள்” என்று குதிக்க ஆரம்பித்துவிட்டாள் பாக்கியம்.
பக்கிரியும் விட்டபாடில்லை. “அது என்ன சேலையாக வேண்டும் என்கிறது! வேட்டியாக வேண்டும் என்றால் என்ன?” என்றான்.
“இல்லை, சேலை தான் வேண்டும்” என்றாள் பாக்கியம்.
“இல்லை, வேட்டி தான் வேண்டும்” என்றான் பக்கிரி.
“இல்லை, சேலை தான்” – இது பாக்கியம்.
“இல்லை, வேட்டி தான்” – இது பக்கிரி.
“சேலை தான்” – பாக்கியம்.
“வேட்டி தான்” – பக்கிரி.
இந்தச் சண்டையில் எரிச்சல் தாங்க முடியாத பக்கிரி கடைசியில் “எந்த மயிராவது வரட்டும்” என்று முதல் தேங்காயை உடைத்தான்.
அவ்வளவு தான்!
கூந்தலில் எத்தனை வகை! கார்மேகம் போல் கருத்த கூந்தல்! வெண்பஞ்சு போல் நரைத்த கூந்தல்! சுருட்டைக் கூந்தல்! செம்பட்டைக் கூந்தல்! எங்கே பார்த்தாலும் கூந்தலின் வண்ணக் கோலம்! சுவரில் பல தினுசுகளில் கூந்தல் கற்றைகள் தொங்கின! கூரையில், விட்டத்தில், தூணில், ஜன்னலில், கதவில்.. இது மட்டுந்தானா.. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் மூக்கில், உதட்டில், கன்னத்தில், நெற்றியில், கழுத்தில்.. உடம்பெல்லாம் கூந்தற் கற்றைகள்! பார்க்கவே பயங்கரமாயிருந்தது.
“ஓ” என்று அலறிய பாக்கியம், “முதலில் இதையெல்லாம் போகச் செய்யுங்கள்” என்று கணவனைப் பார்த்து ஓலமிட்டாள்.
உடனே பக்கிரி “எல்லா மயிரும் போகட்டும்” என்றவனாய் இரண்டாவது தேங்காயை உடைத்தான்.
அவ்வளவு தான்!
அங்கிங்கெனாதபடி எங்கும் தொங்கிக் கொண்டிருந்த கூந்தற் கற்றைகள் மாயமாய் மறைந்து போயின.
இது என்ன வினோதம்!
பக்கிரியின் தலையில் முடியினைக் காணோம்.
பாக்கியத்தின் தலையிலும் கூந்தலைக் காணோம்.
இரண்டு பேரும் மொட்டைத் தலையாக நின்றார்கள்.
தன் தலையைத் தொட்டுப் பார்த்த பாக்கியம், “ஐயோ!.. புருஷன் இருக்கும்போதே என் தலை மொட்டையாவதா?.. ஏன் குண்டுக் கல்லாட்டம் நிற்கிறீர்கள்! எனக்கு முதலில் கூந்தலை வரச் செய்யுங்கள்!” என்று ‘லபோ லபோ’ என்று கதறினாள்.
உடனே பக்கிரி, “எங்கள் தலைமயிர் மட்டும் வரட்டும்!” என்று மூன்றாவது தேங்காயை உடைத்தான்.
முன்பு போல பக்கிரியின் தலையிலும் பாக்கியத்தின் தலையிலும் முடி வந்தது.
ஆனால், தங்கள் வழக்கைத் தீர்த்துக் கொள்வதிலேயே மூன்று தேங்காயும் தீர்ந்துவிட்டது என்று அப்போதுதான் பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் புரிந்தது. ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே!” என்று தலை தலையாக அடித்துக் கொண்டார்கள். என்ன அடித்துக் கொண்டு என்ன பயன்?
திருமேனிக்கும் அமிர்தத்துக்கும்; அவர்களின் நல்ல உள்ளம் போல் உயர் வாழ்வு கிட்டியது. பக்கிரிக்கும் பாக்கியத்திற்கும் அவர்களின் வறிய உள்ளம் போல், வாழ்விலும் வறுமையே மிஞ்சியது.

Sunday 30 October 2011

எது உயர்ந்தது?

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்!
வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த நூக்கமரச் சுவர்ப்பலகைகள். பார்வைக்கும் ரம்மியமாய் அமைக்கப்பட்டிருந்த பலகணிகள்! இன்னும் கண்ணில் தட்டுப்படும் எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே அந்த நாட்டின் கலாச்சாரம் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!
இந்தக் கட்டிடம் கட்டி முடிந்து இப்போது திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் அதைத் திறந்து வைப்பதற்கு வேண்டிய தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல நாட்டுத் தூதுவர்களும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டுத் தூதர், ரஷிய நாட்டுத் தூதர் இருவருமே முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் திறப்புவிழாக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்ற இருந்தார்கள்.
பாண்டு வாத்தியங்களின் வரவேற்பு முழங்குகிறது. அதிபர் வந்துவிட்டார். இதோ! தங்கத் தாம்பாளத்தில் வைத்திருந்த வெள்ளிக் கத்தரிக்கோலை எடுத்து, வாயிற்புறத்தை மறித்துக் கட்டப் பெற்றிருந்த வெளிர் நீலப்பட்டு ‘ரிப்பனை’க் கத்திரிக்கிறார்! புகைப்படக்காரர்கள் தங்கள் காமிராக்களைக் ‘கிளிக் கிளிக்’ என்று தட்ட, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த விளக்குகள் ‘பளிச் பளிச்’ என்று ஒளியை உமிழ்கின்றன. இன்னொரு புறத்தில் சினிமா, மற்றும் தொலைக்காட்சிக் காமிராக்கள் இயங்குகின்றன!
அதிபர் அடுத்த நிகழ்ச்சியைத் தொடர, அருகிலிருந்த ஒரு பட்டனைத் தட்டுகிறார். உடனே பொன் மஞ்சள் நிறப் பட்டுத் துணி மெதுவாக நகர, இன்னாரால் இன்ன தேதியில் இக்கட்டிடம் திறந்து வைக்கப் பெற்றது என்ற விவரங்களுடன் சுவற்றில் பதிக்கப் பெற்றிருந்த பால் போன்ற வெள்ளைச் சலவைக்கல் பளிச்சிடுகிறது. பிறகு அதிபர் திறப்புரை நிகழ்த்தினார்.
“உலகமே வியக்கத்தக்க ஒரு பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம். இக்கட்டிடத்தை உருவாக்கியிருப்பது நம் நாட்டுப் பொறியியல் வல்லுநர்கள் மட்டுமன்று. அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்களும் ரஷியப் பொறியியல் வல்லுநர்களும் இதில் பங்கு கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நாள் முதலாய் திறப்பு விழா நடைபெறுகிற இன்று வரையும் இவர்கள் எந்தவிதப் பிணக்கும் இன்றி ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள். ‘இது தான் நாம் சாதித்திருக்கும் பெரும் சாதனை’ என்றால் யாரும் மறுக்க மாட்டீர்கள். அது மட்டுமின்றி வானளாவ உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம் நம் அந்தஸ்தையும் உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறது. நூறாவது மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் மனிதர்களெல்லாம் ஏதோ சிறு எறும்புகளைப் போல் தோன்றுவார்கள். மேலே இருந்து ஐஸ் கட்டியைப் போட்டால், கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்! அவ்வளவு உயர்ந்த கட்டிடம் இது! இதை நம் கண்ணைப் போல் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் இந்நன்னாளில் கங்கணம் கட்டிக் கொள்வோமாக!”
ஆதிபரின் உணர்ச்சிமிக்க பேச்சைக கேட்ட அவையோர் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். இதன் பிறகு ரஷியத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான பொருளுதவியிலும் தொழில் நுணுக்க உதவியிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக எங்கள் நாடு மிகவும் பெருமைப்படுகிறது. அதிபரவர்கள் தங்கள் பேச்சில் ‘கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஐஸ் கட்டியைப் போட்டால் கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்’ என்று சொல்லி, ‘இது எவ்வளவு உயர்ந்த கட்டிடம்’ என்று வியந்தார். ஆனால், இதை விட உயர்ந்த கட்டிடம் எங்கள் மாஸ்கோவில் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து பிறந்த குழந்தையைப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக மாறி இருக்கும்!” என்றதுமே அவையோரின் கரவொலி பீரங்கி முழக்கம் போலிருந்தது.
பிறகு அமெரிக்கத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
“மதிப்பிற்குரிய ரஷியத் தூதவரவர்கள் மாஸ்கோவிலுள்ள கட்டிடத்திலிருந்து பிறந்த குழந்தையைத் தூக்கிப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக இருக்கும் என்றார். இதில் என்ன அதிசயம் இருக்கிறது! எங்கள் வாஷிங்டனில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதன் உச்சியிலிருந்து ஒரு குரங்கைப் போட்டால், கீழே விழும்போது அது மனிதனாக இருக்கும்!”
அவ்வளவு தான்! அவையோரின் கரவொலி அணுகுண்டு வெடித்தது போலிருந்தது!

Tuesday 25 October 2011

சாத்துக்குடிப் பழம்


“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!”
“கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!”
“பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?”
மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது.
“என்ன? என்ன பேச்சு?”
“ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார்.
“பழக் கூடை பக்கத்திலே இருந்தா ஏன் பசிக்காது! பசியாம் பசி.. வெங்காயம்! புறப்படுறப்பத்தானே பிரியாணி சாப்பிட்டது! அதுக்குள்ளே பசியிh? பசிக்கிறதிருக்கட்டும். இப்பப் பழம் சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆகிறது! மழைக் காலத்திலே சளி பிடிச்சிக்காது! வாயை மூடிட்டு சும்மா வரணும்! எல்லாம் ஈரோடு போய்ப் பார்த்துக்கலாம்!”
அதிகாரக் குரல் கசமுசாக்காரர்களை “கப்சிப்” என்று அடக்கிவிட்டது.
அதிகாரக் குரலுக்குரியவர் பெரியார் ஈ.வெ.ரா. கசமுசாகாரர்கள் அவருடன் பயணம் செய்த இரண்டு கழகச் செயல் வீரர்கள்.
தமிழகத்தின் சழுதாயக் கழனியில் பகுத்தறிவு என்னும் நாற்று நட்டு, அது நன்கு செழித்து வளரக் காரணமானவர் பெரியார். அநாவசியச் செலவென்றால் அவருக்கு அறவே பிடிக்காது. சிக்கனம் அவர் உடன் பிறப்பு. பெரிய காலரும் பெரிய கைப் பட்டியும் வைத்த நான்கு சட்டைகள் தைக்கக்கூடிய துணியில், அதையே சின்னக் காலரும் சின்னக் கைப்பட்டியும் வைத்துத் தைத்தால் ஐந்து சட்டை தைக்கலாமே என்று எண்ணக்கூடியவர். அன்பளிப்பாக ஒரு ரூபாய் கிடைத்தாலும் சரி.. வாய் நிறைய ‘நன்றி’ என்று மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார். அவரிடமிருந்து ஒரு காசு பெயர்வதும் இமயமலை பெயர்வதும் ஒன்றுதான்.
பகுத்தறிவுப் பிரச்சாரம் பரபரப்பாகப் பரவிக் கொண்டிருந்த காலம் அது. பெரியார் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஈரோடு வழியாகச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் நேரம். இரண்டு கழகச் செயல் வீரர்கள் அவருடன் துணையாக வந்து கொண்டிருந்தார்கள்.
கோயம்பத்தூரிலிருந்து தனி வண்டியில் புறப்படும் போது கழகத் தோழர்கள் சென்னை போகிறவரை எல்லாருக்கும் பயன்படட்டுமே என்ற எண்ணத்தில் நான்கு டஜன் சாத்துக்குடிப் பழங்களை ஒரு கூடையில் போட்டுப் பெரியாரிடம் கொடுத்திருந்தார்கள். அதில் ஏதாவது பழம் கிடைத்தால் பரவாயில்லையே என்றுதான் அவருடன் பயணம் செய்த கழகச் செயல்வீரர்கள் ஜாடைமாடையாகப் பேசிக் கொண்டு வந்தார்கள். ஆனால், பெரியாரவர்கள் அசைந்து கொடுத்த பாடில்லை.
ஈரோட்டுக்கு வந்தபோது பேருந்து நிலையத்திற்கருகில் வண்டியை நிறுத்தச் சொன்னார் பெரியார். “சரி.. இப்போது பழம் கிடைக்கப் போகிறது. ஆளுக்கு இரண்டு மூன்றாவது கொடுப்பார்!” என்று ஆவலுடன் எதிர்பார்த்தார்கள் கழகச் செயல் வீரர்கள்.
ஆனால், பெரியார் அவர்கள் பையிலிருந்து நாலணாவை (25 காசுகள்) எடுத்துக் கொடுத்தார்.
“ஆளுக்கு ஒரு டீ சாப்பிடுங்க! டிரைவர்.. நீயுங்கூடத்தான்! மூணு டீக்கு மூணு அணாப் போக, சொச்சம் ஒரணாவைத் திரும்பக் கொண்டு வரணும்!”
பெரியார் அவர்கள் போட்ட உத்தரவு செயல் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாவம்.. அவர்கள் என்ன எதிர்த்தா பேச முடியும்? ஏமாற்றத்தோடு டிரைவரையும் அழைத்துக் கொண்டு டீக்கடைக்குப் போனார்கள்.
அப்போது, “சாத்துக்குடிப் பழேம்.. சாத்துக்குடிப் பழேம்..” என்று இனிமையாக ராகம் விட்டுக் கூவிக் கொண்டு, அழகாக அடுக்கப்பட்ட சாத்துக்குடிப் பழங்களுடன் கூடிய அகன்ற கூடையைத் தலையில் சுமந்து வந்த பழக்காரன், “ஐயாவுக்கு சாத்துக்குடி வேணுங்களா?” என்று பெரியாரிடத்தில் பிரியமாகக் கேட்டான்.
“டஜன் என்ன விலை?” என்றார் பெரியார்.
“ஒண்ணரை ரூபாய்!” என்றான் பழக்காரன்.
“நாலணா குறைத்து ஒண்ணே கால் ரூபாய்க்குத் தர முடியுமா?” பேரம் பேசினார் பெரியார்.
“மற்றவர்களானால் டஜன் ரெண்டு ரூபா தான். ஐயாவானதாலே வாங்கின விலையான ஒண்ணரை ரூபாய்க்குத் தர்றேன்” என்றான் பழக்காரன்.
“ஒண்ணே காலுக்கு மேல் வேண்டாம்” என்றார் பெரியார்.
“டஜன் ஒண்ணே காலுக்குக் கிடைச்சா நானே வாங்கிக்குவேன்” என்று பழக்காரன் ஒரு போடு போட்டான்.
“அப்படியா?” என்ற பெரியார் பக்கத்திலிருந்ம பழக்கூடையை எடுத்துப் பழக்காரனிடம் கொடுத்தார்.
“இதோ பார்.. இதிலே நாலு டஜன் பழம் இருக்கு.. ஒண்ணேகால் ரூபாய்க்குக் கணக்குப் போட்டு, நாலு டஜனுக்கு அஞ்சி ரூபா எடு..” என்று ஒரு பெரும்போடு போட்டார் பெரியார்.
அசந்து போன பழக்காரன் பெரியார் அவர்கள் மேல் பிரியமுள்ளவனாகையால், கையில் பணமில்லாவிட்டாலும் இங்குமங்கும் ஓடி ஐந்து ரூபாயைச் சேர்த்துக் கொண்டு வந்து கொடுத்தான்.
டீ சாப்பிட்டு விட்டுத் திரும்பிய செயல் வீரர்கள் இதைப் பார்த்துக் கொண்டே வந்தார்கள். பெரியார் மறக்காமல் மூன்று டீக்கு மூன்றணா போக மீதம் ஓரணாவைத் திரும்ப வாங்கிக் கொண்டார்.
இதன் பிறகு செயல் வீரர்கள் சென்னை போய்ச் சேரும் வரைக்கும் பச்சைத் தண்ணீருக்குக் கூட வாய் திறந்து பேசவில்லை!
http://puthu.thinnai.com/?p=5315

Monday 17 October 2011

ஏன் பிரிந்தாள்?


மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன!
தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” என்ற பதில் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்;பினாள்! பிடரியில்லாச் சிங்கம் போல் தடந்தோள் இளைஞனொருவன் நிற்கக் கண்டாள்! முதிர்கதிர் தாங்கிய நெற்பயிராய் நாணிய அவள், “ஏன் இயலாது?” என்று குழலிசை மிழற்றினாள்.
“உன் முகமே ஒரு மலர்த் தோட்டம்! பற்பல மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன! இத்தனை மலர்களும் அந்தச் சூரிய காந்தியிடம் இல்லையே!” என்று கம்பீரமாய் கர்ஜித்தான் காளை. நாணிச் சிவந்தாள் நங்கை!
அவள் ஓர் அதிசய அழகி!
அவன் ஓர் அற்புதக் கவிஞன்!
அதிசய அழகும் அற்புதக் கவித்துவமும் ஒன்றையொன்று சந்தித்துக் கொண்டால் என்ன நடக்கும்? ‘விழியசைக்க நேரமில்லை – வீண்தானே அந்த நேரம்!” என்று இமையாத கண்ணினனாய், இனிப்பான நெஞ்சினனாய் அந்தப் பொற்சிலையின் அழகை அள்ளி அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான் கவிஞன். இன்பமழையில் நனைந்து நனைந்து திளைத்துக் கொண்டிருந்தாள் ஏந்திழை.
பிறகு…! பிறகென்ன! அவன் அவளைப் பிரியவில்லை! அவள் அவனைப் பிரியவில்லை!
அவன் அவளைக் கவிதையாக்கினான்! அவள் அவன் கவிதைக்குக் கருப்பொருளானாள்!
அவன் அவளைக் கற்சிலைபோல் நிற்கச் சொல்லி அழகு பார்த்தான். நிலத்தில் பதிந்திருந்த நித்திலப் பாதத்தை நகர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! கணுக்கால் தழுவி நின்ற மணி குலுங்கும் சிலம்பதனை அசைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முன்னே நடந்து வந்து, முழங்குகிற இடை தன்னை நெளிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! பின்னே அமர்ந்திருந்து, யாழ் நகர்ந்து போவதுபோல் நடக்கச் சொல்லி அழகு பார்த்தான்! சித்திரக் கரங்கள் தன்னை முத்திரைகள் பலகோடி பொழியச் சொல்லி அழகு பார்த்தான்! கற்கண்டு உருவெடுத்த பொற்குன்றுத் தோள்கள் தம்மை உயர்த்தச் சொல்லி அழகு பார்த்தான்! நுங்குக் குளிர்ச்சி பொங்கும் சங்குக் கழுத்தினை வளைக்கச் சொல்லி அழகு பார்த்தான்! மொட்டவிழித்து மலர் குலுங்கும் சிட்டுச் சிமிழ் முகத்தைச் சிரிக்கச் சொல்லி அழகு பார்த்தான்! முழங்கால்வரை தொங்கும் மழை மேகக் கூந்தல் தன்னைப் பரப்பச் சொல்லி அழகு பார்த்தான்!
ஆம்! அந்த இளங்கவிஞன் பார்த்தான், பார்த்தான், பார்த்ததையே திரும்பத் திரும்பப் பார்த்தான்.
பார்த்துவிட்டு என்ன செய்தான்? மழை பொழிந்தான்! கவிதை மழை பொழிந்தான்! ஒரு நாள் பொழிந்து விட்டு மறுநாள் நின்று போகும் சாதாரண மழையாக அது இல்லை. அது அடைமழையாகப் பொழிந்து கொண்டிருந்தது! கவிதை ஆறாகக் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது! அமரகாவியங்கள் பிறந்து கொண்டே இருந்தன! நாடே மகிழ்ந்தது! மக்களெல்லாம் மகிழ்ச்சியெனும் கடலில் திளைத்து ‘கவிதை மன்னன் இவன்’ என்று புகழாரம் சூட்டினார்கள். மேன்மேலும் கவிதை பெற ஆர்வமதைக் காட்டினார்கள்.
நம்பிக்கோ மகிழ்ச்சி! நங்கைக்கோ பெருமை! வல்லி ஒரு நாள் வாய் திறந்து யாழ் வாசித்தாள்!
“ஆருயிர் போன்றவரே! பொற்கவிதை உங்களுக்கு எவ்விதமாய் முகிழ்க்கிறது?”
யாழிசை கேட்ட நம்பி உதட்டுத் தாழ் திறந்து பதில் சொன்னான்! “அமுதாக வந்தவளே! உன்னுடைய அழகு உருவம் என்னுணர்வு எழுப்புகிறது! உணர்வெழுப்பும் மோகமெனும் மேகந்தான் கவிதை மழை பொழிகிறது! இந்த அழகுருவம் உள்ள மட்டும் கவிதை மழை பொழிந்து கொண்டேயிருக்கும்!”
நம்பியின் பதில் கேட்டு நங்கை ஏனோ சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அப்படிச் சிந்தனையில் ஆழ்ந்தவள் அடுத்த நாள் நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். மீளாத நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள்! ஆம்! ஆயிழை நஞ்குண்டு மாய்ந்துவிட்டாள்.
கவிஞன் துடித்தான்! கண்ணீர் வடித்தான்! முடிவில் காரிகை விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தான்!
“அமுதாக வந்தவளே!” என்று கனிவாக அழைத்தவரே! உமதுள்ளத்தில் உரு நிறுத்தி உயிர் பிரிந்து செல்லுகின்றேன்! ஏனென்று கேட்பீர்! வயதானால் என்னுடைய அழகுருவம் வாடிப் போகும். அப்போது உம்முடைய கவிதை மழை நின்று போகும்! ஆனால் இப்போது? என்னுடைய அழகு உமது உள்ளக் கோயிலில் நிலைத்திருக்கும். அதனால் காருள்ளவரை நிலைத்திருக்கும் கவிதைகளை உலகில் நீருள்ளவரை பொழிந்து கொண்டே இருப்பீர்! காதலரே! கவிதை மழை பொழியட்டும்! உலக மக்கள் உள்ளமெலாம் வழியட்டும்!”


Monday 10 October 2011

யார் குதிரை?

அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை.  நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது.

திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது.  ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான்.

அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன வந்தது? பாய் விரித்து வீட்டிலே படுப்பதற்கு என்ன? அதற்கு வேகாத வெயில் காய்ந்துகொண்டிருக்கும் இந்த இராஜபாட்டைதானா கிடைத்தது? ஏனிங்கே இப்படி விழுந்து கிடக்கிறான்?

வீரன் குதிரையிலிருந்து இறங்கினான். குப்புற விழுந்து கிடந்தவனைப் புரட்டி மூக்கிலே விரல் வைத்துப் பார்த்தான்.  நல்லவேளை, மூச்சு வந்துகொண்டிருந்தது.  தன் தோளில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு குப்பியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை முகத்தில் தெளித்தான்.  சிறிது நேரத்தில் பிரக்ஞை வந்தது.  
“யாரப்பா நீ? என்ன நடந்தது?” என்று கேட்டான் வீரன்.

“என் பெயர் ஆசையப்பன்! உடல் நலமில்லை! வைத்தியரைப் பார்க்கத் தலைநகருக்குப் போய்கொண்டிருந்தேன்.  வெயில் தாங்காமல் மயங்கிக் கீழே விழுந்துவிட்டேன்!” என்று பதில் சொன்னவாறு படுத்துக்கிடந்தவன் மெதுவாக எழுந்தான்.

“ஆசையப்பன்! நல்ல பெயர்தான்!” இவ்விதம் நினைத்துக் கொண்ட வீரன் அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்டவனாய், “ஆசையப்பா! நோயாளியான நீ தலைநகர் வரைக்கும் நிச்சயம் நடந்து போக முடியாது! அதனால் நீ குதிரையில் ஏறிக்கொள்! நான் குதிரையை நடத்திக் கொண்டு வருகிறேன்” என்று மிகுந்த கனிவோடு சொன்னான்.

இதைக் கேட்ட ஆசையப்பன் அப்போதுதான் மலர்ந்த தாமரையைப் போல் சிரித்தான்.  அடுத்த கணமே குதிரைமேல் ஏறியமர்ந்து கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டான்.  வீரன் குதிரையை மெதுவாக நடத்தியவாறு பின்னாலேயே நடந்தான்.  சில நாழிகை நேரத்துக்கெல்லாம் தலைநகர் வந்துவிட்டது.

“ஆசையப்பா! இனி நீ இறங்கி வைத்தியர் வீட்டுக்குப் போ! நான் என் வழியே போக வேண்டும்!” என்று உதவி செய்த பெருமை பொங்கச் சொன்னான் வீரன்.
ஆனால், ஆசையப்பனோ குதிரையிலிருந்து இறங்கவில்லை. 

“காது கேட்கவில்லையா, இறங்கப்பா!”, வீரன் இரைந்தான்.

“என் குதிரையிலிருந்து நான் ஏன் இறங்க வேண்டும்?” ஆசையப்பன் பதில் சொன்னான்.  வீரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.  குதிரை ஆசையப்பனுடையதாமே?
வீரன் எவ்வளவு சொல்லியும் ஆசையப்பன் குதிரையை விட்டு இறங்கவேயில்லை. இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே, பெரிய கூட்டம் கூடிவிட்டது.  அங்கு வந்த ஊர்க்காவல் வீரர்கள் என்ன என்று விசாரித்தார்கள். வழக்கு என்று தெரிந்ததும் இருவரையும் அரசவைக்கு அழைத்துச் சென்றார்கள்.

வழக்கு அரசருக்கு முன்பு வந்தது.

நடந்தவற்றை ஆரம்பம் முதல் விளக்கமாகச் சொல்லித் தன் குதிரையைத் தனக்கு வாங்கித் தர வேண்டுமென்று அரசரிடம் முறையிட்டான் வீரன்.
ஆனால் ஆசையப்பனோ தன் வழக்கை வேறு விதமாகச் சொன்னான். தான் இராஜபாட்டையில் குதிரைச்சவாரி செய்து வந்தபோது, தன்னந்தனியே நடந்துகொண்டிருந்த அந்த வீரன், தன்னை நிறுத்திப் பேச்சுத் துணைக்குக் கூட வருவதாகச் சொல்லி உடன் நடந்து வந்தானென்றும், தலைநகர் வந்ததும் மலைவிழுங்கி மகாதேவன் போல் தன்னைக் குதிரையிலிருந்து இறங்கும்படிக் கேட்டான் என்றும் சொல்லி, குதிரை தன்னுடையது என்ற வாதிட்டான்.
வழக்கைக் கேட்ட அஸ்தினாபுரத்து அரசருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படித் தீர்ப்புச் சொல்லுவது? வழக்குக்குரிய குதிரையை லாயத்தில் கட்டும்படி உத்திரவிட்ட அரசர், அடுத்த நாள் தீர்ப்புக் கூறுவதாகச் சொல்லி, சிந்தனை வயப்பட்டவராய்ச் சபையைவிட்டு எழுந்து போனார்.

அடுத்த நாள்! விநோதமான வழக்கின் தீர்ப்பைக் கேட்க ஊர் மக்கள் அனைவருமே அரசவையில் கூடிவிட்டனர்.  அரசர் வந்ததும் தீர்ப்பைச் சொன்னார்.
“ஆசையப்பன் லாயத்திற்குச் சென்று குதிரையை அவிழ்த்துக் கொள்ளலாம்!”

தீர்ப்பைக் கேட்டதும் ஆசையப்பன் துள்ளிக் குதித்துக் கொண்டு ஓடினான். ஏமாற்றத்தோடு வீரனும் பின்னாலேயே சென்றான்.

குதிரை லாயத்திற்குச் சென்ற ஆசையப்பனுக்கு பெரும் அதிர்ச்சி!

அங்கே வரிசை வரிசையாக ஐநூறுக்கும் மேற்பட்ட குதிரைகள் கட்டப்பட்டிருந்தன. அதில் எது அவன் முதல் நாள் சவாரி செய்த குதிரை? கண்டுபிடிக்க முடியாமல் விழித்துக் கொண்டு நின்றான்.

ஆனால் வீரன்! தன் குதிரையை அடையாளம் கண்டு கொண்டு, தாடையில் கை வைத்து அன்பாகத் தடவினான்! அது நன்றியுடன் கனைத்தது. அதை அவிழ்த்துக்கொண்டு லாயத்தை விட்டு வெளியே வந்தான் வீரன்.

ஆசையப்பன் குட்டு வெட்ட வெளிச்சமாகிவிட்டது! குதிரை ஏற ஆசைப்பட்டான்! இப்போது கம்பி எண்ணப்போய்விட்டான்!