Sunday 30 October 2011

எது உயர்ந்தது?

அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்!
வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் கொண்டிருந்த நூக்கமரச் சுவர்ப்பலகைகள். பார்வைக்கும் ரம்மியமாய் அமைக்கப்பட்டிருந்த பலகணிகள்! இன்னும் கண்ணில் தட்டுப்படும் எதுவாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிலுமே அந்த நாட்டின் கலாச்சாரம் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தது!
இந்தக் கட்டிடம் கட்டி முடிந்து இப்போது திறப்பு விழா சீரும் சிறப்புமாக நடைபெற இருக்கிறது. அந்த நாட்டின் அதிபர் அதைத் திறந்து வைப்பதற்கு வேண்டிய தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பல நாட்டுத் தூதுவர்களும் வந்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டுத் தூதர், ரஷிய நாட்டுத் தூதர் இருவருமே முன் வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் திறப்புவிழாக் கூட்டத்தில் சிறப்புச் சொற்பொழிவுகள் ஆற்ற இருந்தார்கள்.
பாண்டு வாத்தியங்களின் வரவேற்பு முழங்குகிறது. அதிபர் வந்துவிட்டார். இதோ! தங்கத் தாம்பாளத்தில் வைத்திருந்த வெள்ளிக் கத்தரிக்கோலை எடுத்து, வாயிற்புறத்தை மறித்துக் கட்டப் பெற்றிருந்த வெளிர் நீலப்பட்டு ‘ரிப்பனை’க் கத்திரிக்கிறார்! புகைப்படக்காரர்கள் தங்கள் காமிராக்களைக் ‘கிளிக் கிளிக்’ என்று தட்ட, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த சக்தி வாய்ந்த விளக்குகள் ‘பளிச் பளிச்’ என்று ஒளியை உமிழ்கின்றன. இன்னொரு புறத்தில் சினிமா, மற்றும் தொலைக்காட்சிக் காமிராக்கள் இயங்குகின்றன!
அதிபர் அடுத்த நிகழ்ச்சியைத் தொடர, அருகிலிருந்த ஒரு பட்டனைத் தட்டுகிறார். உடனே பொன் மஞ்சள் நிறப் பட்டுத் துணி மெதுவாக நகர, இன்னாரால் இன்ன தேதியில் இக்கட்டிடம் திறந்து வைக்கப் பெற்றது என்ற விவரங்களுடன் சுவற்றில் பதிக்கப் பெற்றிருந்த பால் போன்ற வெள்ளைச் சலவைக்கல் பளிச்சிடுகிறது. பிறகு அதிபர் திறப்புரை நிகழ்த்தினார்.
“உலகமே வியக்கத்தக்க ஒரு பெரும் சாதனையை நாம் செய்திருக்கிறோம். இக்கட்டிடத்தை உருவாக்கியிருப்பது நம் நாட்டுப் பொறியியல் வல்லுநர்கள் மட்டுமன்று. அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்களும் ரஷியப் பொறியியல் வல்லுநர்களும் இதில் பங்கு கொண்டிருக்கிறார்கள். இந்தக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டிய நாள் முதலாய் திறப்பு விழா நடைபெறுகிற இன்று வரையும் இவர்கள் எந்தவிதப் பிணக்கும் இன்றி ஒற்றுமையாய் இருந்திருக்கிறார்கள். ‘இது தான் நாம் சாதித்திருக்கும் பெரும் சாதனை’ என்றால் யாரும் மறுக்க மாட்டீர்கள். அது மட்டுமின்றி வானளாவ உயர்ந்து நிற்கும் இந்தக் கட்டிடம் நம் அந்தஸ்தையும் உலக அரங்கில் உயர்த்தி இருக்கிறது. நூறாவது மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தால் மனிதர்களெல்லாம் ஏதோ சிறு எறும்புகளைப் போல் தோன்றுவார்கள். மேலே இருந்து ஐஸ் கட்டியைப் போட்டால், கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்! அவ்வளவு உயர்ந்த கட்டிடம் இது! இதை நம் கண்ணைப் போல் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் இந்நன்னாளில் கங்கணம் கட்டிக் கொள்வோமாக!”
ஆதிபரின் உணர்ச்சிமிக்க பேச்சைக கேட்ட அவையோர் மகிழ்ச்சியோடு கரகோஷம் செய்தார்கள். இதன் பிறகு ரஷியத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான பொருளுதவியிலும் தொழில் நுணுக்க உதவியிலும் பங்கு கொள்ளும் வாய்ப்பைப் பெற்றதற்காக எங்கள் நாடு மிகவும் பெருமைப்படுகிறது. அதிபரவர்கள் தங்கள் பேச்சில் ‘கட்டிடத்தின் உச்சியிலிருந்து ஐஸ் கட்டியைப் போட்டால் கீழே விழும்போது அது தண்ணீராக மாறி இருக்கும்’ என்று சொல்லி, ‘இது எவ்வளவு உயர்ந்த கட்டிடம்’ என்று வியந்தார். ஆனால், இதை விட உயர்ந்த கட்டிடம் எங்கள் மாஸ்கோவில் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து பிறந்த குழந்தையைப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக மாறி இருக்கும்!” என்றதுமே அவையோரின் கரவொலி பீரங்கி முழக்கம் போலிருந்தது.
பிறகு அமெரிக்கத் தூதர் சிறப்புச் சொற்பொழிவைத் தொடங்கினார்.
“மதிப்பிற்குரிய ரஷியத் தூதவரவர்கள் மாஸ்கோவிலுள்ள கட்டிடத்திலிருந்து பிறந்த குழந்தையைத் தூக்கிப் போட்டால் அது கீழே விழும்போது கிழவனாக இருக்கும் என்றார். இதில் என்ன அதிசயம் இருக்கிறது! எங்கள் வாஷிங்டனில் ஒரு கட்டிடம் இருக்கிறது. அதன் உச்சியிலிருந்து ஒரு குரங்கைப் போட்டால், கீழே விழும்போது அது மனிதனாக இருக்கும்!”
அவ்வளவு தான்! அவையோரின் கரவொலி அணுகுண்டு வெடித்தது போலிருந்தது!

No comments:

Post a Comment