Sunday 4 December 2011

எங்கே போக விருப்பம்?

அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரம். முச்சந்தியில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. மேடையில் ஒரு பேச்சாளர் முழங்கிக் கொண்டிருந்தார்.
“சீமான்களே! சீமாட்டிகளே! எனக்கு நீங்கள் வாக்களிப்பீர்களேயானால், அது உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொண்டதாகும். நான் சார்ந்திருக்கிற கட்சி அத்தனை செல்வாக்கு வாய்ந்ததாகும்! எங்கள் கட்சி பெருபான்மையாகத் தேர்ந்தெடுக்கப்படுமானால், பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும். We will give you protection from the cradle to the grave”.
இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்த மக்களிடையே பெருத்த ஆரவாரம்.
அடுத்த நாளும் அதே இடத்தில் பெருங்கூட்டம். மேடையில் ஆறடிக்கு மேல் வளர்ந்த ஒற்றை நாடியான உருவம். வாயிலிருந்து வந்த வார்த்தைகள் ஆணித்தரமாக உதிர்ந்தன. கணீரென்று ஒலித்தன.
“உடன் பிறந்தோரே! ‘உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்!’ என்று கேட்பதில் பெருமைப்படுகிறேன். நான் சார்ந்திருக்கும் கட்சி ‘மக்கள் பணியே மகேசன் பணி’ என்று பணிபுரியும் கட்சி! என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் நேற்று இங்கே “பிறப்பு முதல் இறப்பு வரை உங்களுக்கு முழுப் பாதுகாப்பு கிடைக்கும்” என்று சொன்னாராம். எங்கள் கட்சிக்கு நீங்கள் வாக்களித்தால் உங்களுக்குக் கருவறையிலிருந்து கல்லறை வரைக்கும் கவலையில்லை! We will give protection from the womb to the tomb.”
இதைக் கேட்ட மக்களிடையில் எழுந்த ஆரவாரம் அடங்க நீண்ட நேரமாயிற்று.
ஆம்! இரண்டாவதாகப் பேசிய ஒற்றை நாடி உருவந்தான் “மக்களால், மக்களுக்காக, மக்களுடைய ஆட்சி” என்ற புகழ் வாய்ந்த வாக்கியத்தை உலகுக்குத் தந்த ஆபிரகாம் லிங்கன். அவர் செனட் தேர்தலுக்கு நிற்பதால் மேடைக்கு மேடை முழங்கிக் கொண்டிருந்தார். புயல் வேகத் தேர்தல் சுற்றுப்பயணம்! அவர் மட்டுந்தானா? எதிர்க் கட்சி வேட்பாளரும் அப்படியே!
அன்று ஞாயிற்றுக்கிழமை. கிருத்துவ மத வழக்கப்படி எல்லாரும் மாதா கோவில் செல்ல வேண்டும். அங்கே பாதிரியாரின் மதப் பிரசங்கத்திற்குச் செவி சாய்க்க வேண்டும். ஆபிரகாம் லிங்கனும் மாதா கோவிலுக்கு வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.
புதிதாக வந்திருந்த இளம் பாதிரியார் பிரசங்கத்தை ஆரம்பித்தார்.
“ஏசுவானவரை விசுவாசிக்கிறவர்களே! உங்கள் விசுவாசம் வீண் போவதில்லை! நீங்கள் திரும்பவும் விசுவாசிக்கப்படுவீர்கள்! தேவ குமாரன் உங்களுக்காகத்தான் சிலுவையில் மாய்ந்தார்! உங்கள் பாவங்களைப் போக்கி இரட்சிப்பதற்காகத்தான் அவர் மூன்று நாள் கழித்து கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்து வந்தார். இப்போது அந்த தேவகுமாரன் தன் தந்தையான இறைவரோடு சொர்க்கத்தில் உறைகிறார். ஏசுவானவரை நேசித்து நீங்களும் அந்த சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் நேசிப்பதில் குறையிருந்தால் உங்களுக்கு நரகந்தான் கிட்டும். அந்த நகரம் சாத்தானுக்குப் பிரீதியான இடம்! எங்கே.. இப்போது சொல்லுங்கள்! நீங்கள் போக விரும்புவது சொர்க்கமா, நரகமா? சொர்க்கத்திற்குப் போக விரும்புவர்களெல்லாம் கையை உயர்த்துங்கள் பார்க்கலாம்!”
பாதிரியாரின் இந்த வேண்டுகோள் மண்டபத்தில் எதிரொலித்ததும் கூடியிருந்தோர் அனைவரும் கையைத் தூக்கினார்கள். ஆனால், ஆபிரகாம் லிங்கன் மட்டும் கை தூக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இது ஆச்சரியமாய் இருந்தது. அடுத்த வேண்டுகோளைத் தொடுத்தார்.
“எங்கே..,? நரகத்திற்குப் போக விரும்புகிறவர்கள் கையை உயர்த்துங்கள்!”
மண்டபத்தில் ஒரு கை கூட உயரவில்லை. இப்போதும் ஆப்ரகாம் லிங்கன் முன் போலவே அமர்ந்திருந்தார்.
பாதிரியாருக்கு இப்போது முன்னிலும் பன்மடங்கு ஆச்சரியமாய் இருந்தது. எனவே, பாதிரியார், “மிஸ்டர் லிங்கன்! நீங்கள் சொர்க்கத்திற்குப் போக விரும்பவில்லை! நரகத்திற்கும் போக விரும்பவில்லை! அப்படியானால் வேறு எங்கு தான் போக விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
ஆப்ரகாம் லிங்கனிடமிருந்து கணீரென்று பதில் வந்தது. “நான் செனட்டுக்குப் போக விரும்புகிறேன்!”
ஆம்! தேர்தலில்; வெற்றி பெற்று அவர் செனட்டுக்குத் தான் போனார். பிறகு அமெரிக்காவில் வெள்ளை மாளிகை என்று பெயர் பெற்ற ஜனாதிபதி மாளிகையிலும் குடியேறினார்.

http://puthu.thinnai.com/?p=6582

No comments:

Post a Comment