Monday 5 September 2011

காயகல்பம்

அவன் ஒரு இளம் விஞ்ஞானி.  இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறான்.  அவனுக்கு வாழ்க்கையில் ஒரே ஓர் இலட்சியம்.  குறிப்பிட்ட ஒரு மருந்தைக் கண்டுபிடித்து விட வேண்டும்!
அப்படிப்பட்ட அந்த மருந்துதான் என்ன?

பழங்காலத்தில் நம் முன்னோர்களிடம் காயகல்பம் என்ற மருந்து இருந்ததாம்! அதைச் சாப்பிட்டால் வயோதிகர்கள் இளைஞர்களாக மாறிவிடுவார்கள்! இத்தகைய அரிய மருந்தைச் செய்யும் முறை இரகசியமாகவே வைக்கப்பட்டு, முன்னோர்கள் மறைந்த போது அதுவும் மறைந்துவிட்டதாம்! அவர்கள் மட்டும் கொஞ்சம் பரந்த மனப்பான்மை உள்ளவர்களாயிருந்து, காயகல்பம் செய்யும் முறைகளை ஓலைக் குருத்துக்களில் குறித்து வைத்து, பின் சந்ததியாருக்கு விட்டுச் சென்றிருந்தால், இப்போது நாம் அதை அதியற்புதமாக முறைபடுத்தி, காயகல்பத்தைப் பெரும் அளவில் உற்பத்திச் செய்து ‘பாட்டில்’களிலடைத்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்! கிழவனைக் குமரனாக்கும் மருந்தென்றால் கிராக்கிக் கேட்கவா வேண்டும்! அதிகமான அளவுக்கு அந்நியச் செலாவணி சம்பாதித்திருக்க முடியும்!

துரதுஷ்டவசமாக அந்தக் காயகல்பம் செய்யும் முறை நமக்குக் கிடைக்காமலே போய்விட்டது! கிடைக்காமல் போனாலென்ன? நமது மூளை எங்கே போய்விட்டது? ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தால் போகிறது! இந்த ஆராய்ச்சியில் தான் இளம் விஞ்ஞானி தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்!
ஐந்தாண்டுக் காலம் அவன் அயராமல் பாடுபட்டான்! புடம் போடுதல் என்ற தமிழ் நாட்டுச் சித்த வைத்திய முறையையும் நவீன இரசாயன முறைகளையும் ஒருங்கிணைத்து ஆராய்ச்சிகைளத் தொடர்ந்தான்! அவன் பட்ட பாடு வீண் போகவில்லை! கடைசியாக காயகல்பத்தைக் கண்டுபிடித்து விட்டான்! இதைக் கிழக் குரங்குகளுக்குக் கொடுத்தால் இளங் குரங்குகளாக மாறிவிட்டன! கிழக் குதிரைகளோ குட்டிக் குதிரைகளாய் மாறின! பட்ட மரங்களில் அதை ஊசி மூலம் செலுத்தினால் அவை துளிர்விட்டுப் பச்சைப் பசேலென்று வளர ஆரம்பித்தன!

இளம் விஞ்ஞானிக்கு ஓர் ஆசை! வயோதிகம் அடைந்து விட்;ட தன் தாய் தந்தையருக்கு இந்த மருந்தைக் கொடுத்து அவர்களை இளமையோடு பார்த்து மகிழ வேண்டும்! மருந்தும் கையுமாக நேரே இந்தியாவிற்கு வரவேண்டுமென்று தான் முதலில் நினைத்தான்! ஆனால் வயோதிக நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கும் தாய் தந்தையரைப் பார்ப்பது மனத்திற்கு மிக்க வேதனையாக இருக்கும் என்று கருதி, காயகல்பம் அடங்கிய இரண்டு ‘பாட்டில்’களை இந்தியாவிற்குப் பார்சல் செய்தான்! அதில் ஒரு ‘டோஸ்’ எவ்வளவு, அதை எப்படி உட்கொள்வது என்பது பற்றி விவரங்களையெல்லாம், தனியாகக் கடிதத்தில் எமுதி, ‘ஏர் மெயில்’ தபாலில் போட்டான்.

ஒரு மாதம் கழித்துத் திடீரென்று இந்தியாவிற்குத் திரும்பினால் இளமைக் கோலத்தில் தாய் தந்தையரைத் தரிசிக்க முடியும்! இதை நினைக்கும்போதே இளம் விஞ்ஞானிக்கு உள்ளமெல்லாம் இனித்தது! இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ஒரு மாதம் கழித்து விமானத்தில் பயணமானான்.

இப்போது அவன் இந்தியாவிற்கு வந்து விட்டான்! தன் சொந்த ஊருக்கும் வந்துவிட்டான்! டாக்ஸியில் வந்து வீட்டுக்கு முன்பு இறங்கினான்.
எதிர்பார்த்தது போலவே வயதான அவன் தாயார், வீட்டு வாயிற்படியில் காத்துக் கொண்டிருக்கவில்லை! ஆனால்.. தாயாரின் முகச்சாயையுடன் கூடிய பதினெட்டு வயது இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்! அவள் இடுப்பை அழகான ஒரு கைக் குழந்தை கவ்விக் கொண்டிருந்தது!

இளம் விஞ்ஞானிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை! “அம்மா” என்று கூவியவாறே ஓடிப் போய்த் தாயின் காலில் விழுந்து வணங்கினான்!
இளந்தாய் அவனை அன்பாக உச்சி மோந்து, “மகனே!” என்று கன்னங்களை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தாள்!

அவன் கனவு பலித்துவிட்டது! காயகல்பம் சரியாகத் தான் வேலை செய்கிறது என்பது நிருபணமாகிவிட்டது! தாயைப் பார்த்தாயிற்று! தந்தையையும் பார்த்து விட்டால்..! ஆவல் தாங்க முடியாதவனாக, “அப்பா எங்கே, அம்மா?” என்றான் இளம் விஞ்ஞானி.

“அதை ஏனப்பா கேட்கிறாய்?” என்றவாறு தாயார் கண்ணைக் கசக்கிக் கொண்டதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனவனாய், “என்னம்மா, அப்பா இறந்துவிட்டாரா?” என்று திகிலுடன் கேட்டான்.

அதற்கு அவன் தாய், “பார்சலில் மருந்து வந்ததும் உன் அப்பாவுக்கு அளவுக்கு மீறிய மகிழ்ச்சியாய் போய்விட்டது! அதில் ஒரு ‘டோஸ்’ எடுத்து முதலில் எனக்குக் கொடுத்தார்! முறைப்படி நான் சாப்பிட்டதும் இப்படி இளமையாக மாறிவிட்டேன்! இதைப் பார்த்ததும் அவருக்குத் தலைகால் புரியவில்லை! அந்த வேகத்தில் ஒரு ‘டோஸ்’ மருந்துக்குப் பதில் இரண்டு ‘டோஸ்’ சாப்பிட்டார்! அதன் பலன்..! இதோ இப்படி மாறிவிட்டார்!” என்று இடுப்பிலே கவ்விக் கொண்டிருந்த குழந்தையைக் காட்டினார்!



No comments:

Post a Comment